Skip to main content

1146 results found

விழுப்புரம்>கண்டாச்சிபுரம்>ஏமாப்பூர்
விழுப்புரம் ஏமப்பேறூர் சபையாரும் ஊராரும் சேர்ந்து அவ்வூர் திருவாலந்துறையுடைய பரமஸ்வாமிக்கு இறையிலி தேவதானமாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அந்நிலத்தின் போகங் கொண்டு[விளைச்சல்] கோயிலுக்கு செய்த நிவந்தம் பற்றித் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. அந்நிவந்தமாவன: உடையார் திருவாலந்துறையுடைய பரமஸ்வாமியை வேதமந்திரங் கொண்டு ஆராதிக்கும் பிராமணர் ஒருவருக்கு கொடுக்கப்படும் நெல்லின் அளவு, சித்திரைத் திருவிழா மற்றும் மார்கழித் திருவிழாக்கள், திருவேட்டை எழுந்தருளும்போது படைக்கும் பெருந்திருவமுது, திருவிழா நாட்களில் தினமும் விளக்கெரிக்க எண்ணை நாழியாக 14 நாளைக்கும் வேண்டிய மொத்த எண்ணை, இரண்டு திருவிழாக்களும் செய்ய வந்தாருக்கு [ஆராதனை செய்ய வந்த குருக்கள்?] நெல்லும் பொன்னும், திருமாலைக்குச் செலவாகும் நெல் போன்ற செலவுகள் அந்த நிலத்தின் போகத்திலிருந்து செலவு செய்யப்பட வேண்டும் என்ற தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை தென்னாற்றூர் நாட்டு குளத்தூர் கோயில் இறைவன் குளந்தை ஈஸ்வரமுடையார் கோயிலில் ஓய்மா நாட்டு காம்பில் பட்டி என்ற ஊரைச் சார்ந்த அரங்கன் என்பான் நினைவாக பன்னாட்டார் மற்றும் உறவினர்கள் சந்திவிளக்கு ஒன்று எரிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை திருமுதுகுன்றத்தைச் சார்ந்த சிற்றாமூர் உடையான் தொண்டன் பெண்ணாகடன் என்பானின் மகன் காங்கேயன் என்பவன் குளந்தை ஆண்டார் கோயிலில் இறைவன் முன் திருப்பதிகம் பாடும் சேவைக்காக ஐயனுக்கு வாய்த்தான் தெருவில் ஒரு மனையும், மனைப் படப்பையும், நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும், மாதம் ஒன்றுக்கு ஒரு பணமும் இக்கோயில் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை இவ்வூர் கைக்கோள இனத்தைச் சார்ந்த செங்கோளன் அம்பலக் கூத்தன் என்பவன் குளந்தை ஆண்டார் கோயிலினுள் சேட்டை பத்தியில் புவனநாயகேசுரம் முடையார் இறைவனை நிறுவியுள்ளான். இவ்விறைவனுக்கு அமுதுபடி மற்றும் திருவிளக்கு ளிப்பதற்கு இவனிடமிருந்து 30 கலம் நெல்லும், 7 பணமும் இக்கோயில் தானத்தார் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு தினமும் உரி அளவு அரிசி அமுதும், விளக்கும் வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை புலியூர்க் கோட்டத்து புலியூர் ஊர் வேற்காடு பகுதியைச் சார்ந்த திருவொற்றியூர் உடையார் என்பவன் குளந்தை ஆண்டார் கோயில் இறைவனுக்கு செய்யும் சேவைகளுக்காக நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும், துணிக்கு பணமும், கோயில் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை சோழ மண்டலத்து வீரநாராயணம் என்கிற சுந்தரபாண்டிய சதுர்வேதி மங்கலத்து சிறுபுளூர் என்ற ஊரைச் சேர்ந்த உத்தமநம்பி கடுஞ்சிறுத்த நாயன் என்பவன் மடத்து உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில் எடுப்பித்த சப்தமாதர் இறைவிகளின் பூசைக்காக வேண்டி பொன்னூர் பற்று வள்ளி ஊரில் 1000 குழி நிலத்தினை வாங்கித் தானமாக வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை குளத்தூர் அக்னீசுவரமுடையார் இறைவனுக்கு அமுது சமைக்கத் தேவையான பொருட்களை (திருப்படி மாற்று) வழங்குவதற்கு இவ்வூர் வாணியர்களிடம் நிலம் ஒன்றினை செங்கேணி நாலாயிவந் அம்மை அப்பன் என்கிற ராஜேந்திரச் சோழச் சம்புவராயன் வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை பல்குன்றக்கோட்டத்து அண்ணமங்கலப் பற்றைச் சேர்ந்த நாட்டவர், அகம்படியார், அகம்படி முதலிகள், பன்நாட்டவர், பன்முதலிகள் ஆகியோர் தென்னாற்றூரில் கூடி, குளத்தூர் ஊரிலுள்ள அக்னீசுரமுடைய மகாதேவர் கோயிலில் இறைவனுக்கு திருப்படிமாற்று, பூசை மற்றும் நாட்டுத் திருநாள் திருவிழாவுக்காக, தென்னாற்றூர் நாட்டிலுள்ள ஆளியூர் என்கிற ஊரைத் தேவதானமாக வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை>சேத்துப்பட்டு>மடம்
திருவண்ணாமலை செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லன் என்கிற ராஜேந்திரசோழ சம்புவராயன் என்பான் பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குளத்தூர் ஊரிலுள்ள திருவக்னீசுரமுடைய மகாதேவர் கோயில் இறைவனுக்கு திருச்சாந்து (சந்தணம்) பூசுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் குறைவாக இருந்ததால் கூடுதலாக நிலம் வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலம் ஊரிலுள்ள திருக்கற்றளி மகாதேவர் இறைவனுக்கு திருவிளக்கு ஒன்று வைப்பதற்கு ஸ்ரீகங்கரையன் கங்கசூளாமணி என்னும் மும்முடிச்சோழ செம்பியன் சீயகங்கரையன் என்பவன் 90 ஆடுகளை இக்கோயில் சிவனடியார்களிடம் வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் மகளான அக்கயதேவி என்பவள் இப்பகுதியின் நிர்வாகத்தினை மேற்கொண்டிருந்தாள். அவள் சீயமங்கலம் திருக்கற்றளி மகாதேவர் வழிபாட்டின் போது ஒழுக்கவி (இறை முன் படைக்கும் அமுது) படைப்பதற்கு நிலம் ஒன்றினைத் தானமாக வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலத்து [திருக்கற்றளி] எழுந்த தேவர் என்றழைக்கும் இறைவனுக்கு ஸ்ரீ கங்கரையன் கங்கசூளாமணி என்கிற மும்முடிச்சோழ செம்பியன் சீயகங்கரையன் தானமளித்துள்ளான். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் தானத்தின் விபரம் அறிய இயலவில்லை.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை இருங்கோளப்பாடி நாட்டு மேற்கால் நாட்டுப் பருவூர் கூற்றத்து நெற்குப்பை என்னும் திருமுதுகுன்றம் கோயிலில் காவல் பணி உரிமை பெற்றிருந்த சிற்றாமூர் என்ற ஊரைச் சார்ந்த தொண்டர் தியாகப் பெருமாள் பெண்ணாகிய பெருமாள் காங்கேயர் என்பவர் தூணாண்டார் கோயிலில் இறைவன் முன் திருப்பதிகம் பாடி திருவாயிலுக்கு தேவையான நன்மைகள் செய்ததற்கு, இவ்வூரிலிருந்த பல்லவன் வீதியில் சித்திரமேழிமடம் காணியாட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும் ஆண்டொன்றுக்கு 12 பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை காஷ்மீர் பகுதியைச் சார்ந்த ஆரிய பட்டர்களில் யஜீர் வேதம் கற்றறிந்தவரும் பாரத்வாஜ கோத்திரம் பவுதானிய சூத்திரத்தைச் சார்ந்த திருவானைக்காவூர் ஊரிலுள்ள பெரிய பெருமான் ஆரியச் சக்கரவத்தி என்பவர் மகாபிரதானி முத்தரசர் உடல் நலம் உட்பட அனைத்து நலனுக்காகவும் சீயமங்கலம் ஆளுடைய நாயனார் தூணாண்டார் இறைவனுக்கு பூசை, அமுதுபடி உள்ளிட்டவைகளுக்கு கரிகால சோழநல்லூர் ஊரவரிடம் அந்தமபாகண்ட நல்லூரினை விலைக்கு வாங்கி திருநாமத்துக் காணியாக தானமளித்துள்ளார்.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குலோத்துங்க சோழ நல்லூர் எனும் சீயமங்கலம் ஊர் தூணாண்டார் கோயில் நிர்வாகிகளான தானத்தார் கூடிபேசி, ஏற்கனவே இக்கோயில் இறைவனுக்கு திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்ட நிலம் நீக்கி உள்ள ஏனைய நன்செய், புன்செய், நத்தம் உட்பட நிலங்களில் வசூலிக்கப்படும் வரிகளை தூணாண்டார் இறைவன் பூசைக்கும், 5 திருவிளக்குக்கும், கோயில் திருப்பணிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருக்கை கோட்டி ஓதும் (திருமுறைப் பாசுரம் ஓதுவார்) பெருமாள் காங்கேயர் என்பவருக்கு மனை ஒன்றும் கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை>வந்தவாசி>சீயமங்கலம்
திருவண்ணாமலை இப்பகுதி காவல் அதிகாரியாக பணியாற்றும் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன் என்பவன் தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலத்து கோயில் தூணாண்டார் இறைவனுக்கு திருஅர்த்தசாம சந்திக்குத் தேவையான அமுது படிக்கு இக்கோயில் தேவதானமாக உள்ள நிலங்களில் காவல் பணிக்காக அளிக்கப்பட்ட வரியினைத் தானமாக வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>வெடால்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து சிங்கபுரநாட்டு பொன்னூர் பற்றில் இடம் பெற்றிருந்த விடால் என்னும் ஊரில் அமைந்துள்ள கறைகண்டீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு அமுதுபடி, நந்தா விளக்கு, வழிபாடு மற்றும் கோயில் பராமரிப்பு செலவுகளுக்காக திருமணவில் ஏந்தல் என்ற ஊரின் வரிவருவாய் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>வெடால்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து சிங்கபுர நாட்டு, பொன்னூர் பற்றில் இடம்பெற்றிருந்த விடார் ஊரிலுள்ள கறைகண்டீச்சுரம் உடையார் கோயிலுக்கு உமையா நத்தம் திருநாமத்துக்காணியாக இறைநீக்கித்தரப்பட்டு, அதன் வரிவருவாய்கள் கோயில் பூசை, திருப்பணி, நந்தா விளக்கிற்குப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>ஓசூர்
திருவண்ணாமலை சம்புவராய மன்னன் முந்தைய கல்வெட்டில் தெரிவிக்கப்பட்ட ஆணையினை தொண்டை மாநாயக்கன் என்னும் அதிகாரி வாரியனுக்கும் கரணத்தானுக்கும் தெரிவிக்கும் ஓலை இது. சென்ற கல்வெட்டில் சிறு குளத்தூர் தனி ஊராக இருந்தது அவ்வூரினை ஓசூர் என்கிற காலிங்கராய நல்லூர் ஊரில் இணைத்து 86 பட்டர்களுக்கு அகர இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது. முன்னர் கோயிலுக்குரிய தேவதான ஊராக விளங்கிய ‘காலிங்கராய நல்லூர்’ ‘காலிங்கராய சதுர்வேதி மங்கலம் ஆகவும் மாற்றப்பட்டு பிராமணர்களுக்குரிய ஊராக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வூரின் அனைத்து வரிகளும் தேவதானத்துக்கு ஒரு பங்கும், திருவிடையாட்டத்துக்கு ஒரு பங்கும், 86 பட்டர்களுக்கு 86 பங்கும் வழங்கிட தெரிவிக்கும் ஓலை.
திருவண்ணாமலை>வந்தவாசி>ஓசூர்
திருவண்ணாமலை ஓசூர் என்கிற காலிங்கராய நல்லூர், சிறுகுளத்தூர், இவைச்சில் ஆகிய ஊர் நிர்வாகிகளான வாரியன் மற்றும் கரணத்தானுக்கும் சம்புவராய மன்னன் இராசநாராயணன் மேற்படி ஊர்கள் அகர இறையிலியாக அளித்துள்ள ஆணை. மேற்படி ஊர்களில் உள்ள நன்சை, புஞ்சை, தோட்ட நிலங்கள், திருத்திக்கொள்ளவுள்ள நிலங்கள், புறக்கலனை உட்பட இவற்றிலிருந்து வசூலிக்கப்படும் கடமை, பொன்வரி உள்ளிட்ட பல வரிகளும் மற்றும் பலசில்வரிகளும் ஆகிய அனைத்து வரிகளின் வருவாய்களை 88 பங்குகளாக பிரித்து தேவதானத்துக்கு (சிவன் கோயிலுக்கு அளிக்கும் தானம்) ஒரு பங்கும், திருவிடையாட்டத்துக்கு (பெருமாள் கோயிலுக்கு அளிக்கும் தானம்) ஒரு பங்கும், இவ்வூரில் குடியேற்றப்பட்டுள்ள 86 பட்டர்கள் குடும்பத்திற்கு 86 பங்குகள் என பகிர்ந்தளித்து இம்மூன்று ஊர்களும் அகர இறையிலியாக தானமளிக்கப்பட்டுள்ளது.